ஸ்ரீபெரும்புதூர்:திருவள்ளூர் மாவட்டம் வயலூர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் என்கிற பாக்யா (38). திருநங்கையான இவர், ஸ்ரீபெரும்புதூர் ஏரிக்கரை அரசு மதுபான கடை எதிரே குடிசை அமைத்து வசித்து வருகிறார். இவர் கள்ள சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பாக்கியா வீட்டில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி. சுனில் தலைமையிலான போலீசார் பாக்கியாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.