ஆலோசனை கூட்டத்தில் அடிதடி: மாஜி அமைச்சர் மணிகண்டன் மீது போலீசில் அதிமுகவினர் புகார்

ராமநாதபுரம்: அதிமுக தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு ஒற்றை தலைமை ஏற்க வலியுறுத்தி ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் கவிதா சசிகுமார் பேசி கொண்டிருந்தபோது, கூட்டத்திற்குள் புகுந்த சிலர் ஓபிஎஸ் வாழ்க என கோஷம் எழுப்பி நாற்காலிகளை தூக்கி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர்.

இதில் அதிமுக இளைஞரணி துணை செயலாளர் செல்வராஜ், கிளை செயலாளர்கள் சந்திரன், மணிபாரதி ஆகியோரின் மண்டை உடைந்தது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தாக்குதலுக்கு பின் ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடந்தது. கூட்ட அரங்கில் திடீரென நுழைந்து கலவரம் ஏற்படுத்த  காரணமான முன்னாள் அமைச்சர் மணிகண்டனை அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என ஏகமனதாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடியாட்களை அனுப்பி பிரச்னை உருவாக்கியதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் அதிமுகவினர் கேணிக்கரை போலீசில் புகார் அளித்தனர்.

Related Stories: