சென்னை : எடப்பாடி பழனிசாமிக்கு துதி பாடும் குழுவைத்தான் ஜூலை 11ம் தேதி நடத்த திட்டமிடுகின்றனர் என்று ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளரும் அதிமுக செய்தித் தொடர்பாளருமான கோவை செல்வராஜ், ஜூலை 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கான அழைப்பிதழில் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்து இல்லாததால் அது செல்லாது. பொதுக்குழு அழைப்பிதழை தன்னிச்சையாக யாரும் அனுப்ப முடியாது; அப்படி யாரும் அனுப்பினால் அது செல்லாது.எடப்பாடி பழனிசாமிக்கு துதி பாடும் குழுவைத்தான் ஜூலை 11ம் தேதி நடத்த திட்டமிடுகின்றனர்.
எந்த கையெழுத்தும் இல்லாமல் அனுப்பப்பட்டுள்ளதால் அழைப்பிதழ் போலியா என சந்தேகம் எழுகிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு தலைவர் கிடையாது. அதிமுகவில் நடக்கும் சதிக்கும் துரோகத்திற்கும் எடப்பாடி பழனிசாமியே காரணம்.ஒற்றை தலைமை என்று கட்சியில் குழப்பம் விளைவித்து வருகிறார் பழனிசாமி.பழனிசாமி முதல்வராக இருந்த காலத்தில் நடந்த தேர்தல்களில் அதிமுக படுதோல்வி அடைந்தது.அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான். அந்த இடத்திற்கு யாரும் வர முடியாது. பன்னீர் செல்வம் பற்றி பேசுவதை ஜெயக்குமார் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு பேசினால் அவர் பேச்சுக்காக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.பழனிசாமி தரப்பிற்கு அதிமுகவைப் பற்றியும் கவலை இல்லை. இரட்டை இலை சின்னம் பற்றியும் கவலை இல்லை. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ பன்னீர் செல்வம் தான்,என்றார்.