சென்னை: சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபாரம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து காணப்பட்ட நிலையில், அண்மை நாட்களாக தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தினசரி பாதிப்பு 2000-ஐ கடந்து பதிவாகி வருகிறது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக பதிவாகி வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் எடுத்து வருகின்றன. அந்த வகையில், சென்னையில் முகக்கவசம் அணிவதை நேற்று சென்னை மாநகராட்சி கட்டாயமாக்கியது.
அதன்படி இன்று மற்றோரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, சென்னை மக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் இல்லையென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். வணிகவளாகம், திரையரங்குகள், மார்க்கெட் போன்ற மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் வணிக நிறுவங்களின் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அங்காடிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. கொரோனா தொற்று மீண்டும் பரவிவருவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.