சேலம்: தமிழகத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வருவது முற்றிலும் தடுக்கப்படும் என்று சேலத்தில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார். தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று சேலம் வந்தார். அவர், சேலத்தின் மையப்பகுதியில் ஓடும் திருமணிமுத்தாற்றை ஆய்வு செய்தார். பின்னர், அவர் அளித்த பேட்டி: குப்பைகளை எரிக்கக்கூடாது. வெளியேறும் கார்பன் சுற்றுச்சூழலை பாதிக்கும். அதுவும் பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பொருட்களை எரித்தால், அதில் இருந்து வெளியேறும் டயாக்சின் வேதிப்பெருள் புற்றுநோயை உண்டாக்கும். அதனால், மக்கள் குப்பைகளை எரிக்காமல், கவனமுடன் செயல்பட வேண்டும். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர், ஒரே நாளில் 187 டன் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து, உலக அளவில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.