நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் தவித்த இலங்கை டாக்டருக்கு உதவிய திருச்செந்தூர் போலீஸ்காரர்: பாராட்டு குவிகிறது

உடன்குடி: திருச்செந்தூரில் நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் தவித்த இலங்கை டாக்டருக்கு அவர் மருத்துவர் என்பது தெரியாமலேயே உதவிய  போலீஸ்காரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கொழும்புவில் அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி தற்போது கோவையில் வசித்து வருபவர், டாக்டர் ராமசுப்பு. கடந்த 18, 19ம் தேதிகளில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்த இவர், தனியார் விடுதியில் தங்கியுள்ளார். 18ம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் ராமசுப்புவின் ஒரு வயது பேரனுக்கு கடும் வயிற்று வலி, காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளான்.

இதையடுத்து மருந்து வாங்குவதற்காக  ராமசுப்பு மெடிக்கல் ஸ்டோரை தேடி அலைந்துள்ளார். ஆனால் நேரம் நள்ளிரவை கடந்து விட்டதால் மெடிக்கல் ஸ்டோர் எதுவும் திறக்கப்படாததால் பரிதவித்தார். அப்போது ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரர், அவரை அழைத்து விசாரித்துள்ளனர்.உடனே ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரர், அருகிலிருந்த மெடிக்கல் உரிமையாளரை செல்போனில் அழைத்து கடையை திறக்கச் செய்து தேவையான மருந்தை வாங்கிக்  கொடுத்துள்ளார். பின்னர் அந்த போலீஸ்காரரே தனது இருசக்கர வாகனத்தில், ராமசுப்புவை அவர் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் சென்று விட்டுள்ளார்.

அப்போது ராமசுப்பு,  போலீஸ்காரரிடம் பெயரை மட்டும் கேட்டுள்ளார். அதற்கு அவர், சிவா என்று கூறியுள்ளார். இதனிடையே கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து கோவைக்கு சென்ற ராமசுப்பு, நள்ளிரவில் தனக்கு உதவிய போலீஸ்காரர் மற்றும் தமிழக போலீசாரை பாராட்டி மாவட்ட எஸ்பி  பாலாஜி சரவணனுக்கு கடிதம் அனுப்பினார். காவலரின் மனிதநேயம், தன்னலமற்ற சேவை மனப்பான்மையை அதில் பாராட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து டாக்டர் ராமசுப்புவுக்கு உதவிய போலீஸ்காரர் யார் என விசாரிக்கும்போது, அவர் திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சிவா தங்கத்துரை என்பது தெரிய வந்தது. அவரை எஸ்பி  பாலாஜி சரவணன் நேரில் அழைத்து பாராட்டினார். காவலரின் இந்த மனிதநேயமிக்க செயல், சமூக வலைதளங்களில் வைரலானது. பல்வேறு தரப்பினரும் போலீஸ்காரர் சிவா தங்கத்துரையின் செயலை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Related Stories: