திருவில்லிபுத்தூர் அருகே பெருங்கற்காலத்தை சேர்ந்த இரும்பு; உருக்காலை தடயம் கண்டுபிடிப்பு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே, பெருங்கற்காலத்தை சேர்ந்த 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்காலையின் தடயத்தை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கண்டுபிடித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் காவல்தோப்பு பேச்சியம்மன் கோயில் எதிரில் தொல்லியல் தடயங்கள் இருப்பதாக ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்திற்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார், ராமநாதபுரம் சேதுபதி அரசு கலை கல்லூரி முதுகலை தமிழ்த்துறை மாணவி சிவரஞ்சனி, திருப்புல்லாணி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் மனோஜ், பிரவீனா ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில், ஒரு ஏக்கர் பரப்பளவில் இரும்பு தாதுக்கள், இரும்பு கழிவுகள், கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள், கல் சுத்தியல்களின் உடைந்த பாகங்கள், சுடுமண் குழாய்கள், கல் குண்டு ஆகியவை சிதறி கிடப்பது கண்டறியப்பட்டது. இவை பெருங்கற்காலத்தை சேர்ந்த இரும்பு உருக்கு உலையின் தடயங்களாகும். இது குறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு கூறுகையில், ‘‘பெருங்கற்காலத்தை சேர்ந்த மக்கள் இயற்கையாக கிடைக்கும் இரும்பு தாதுக்களை, உருக்காலைகள் மூலம் உருக்கி, இரும்பை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை அறிந்திருந்தனர். இரும்பை கொண்டு வலிமையான கத்தி, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்களையும், வேளாண் கருவிகளையும் தயாரித்து பயன்படுத்தியுள்ளனர். இதனால் பெருங்கற்காலத்தை இரும்புக்காலம் எனவும் அழைப்பர்.

பெருங்கற்காலத்தின் பண்பாட்டு வளர்ச்சிக்கு இரும்பு கண்டுபிடிப்பு உறுதுணையாக இருந்துள்ளது. இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கல் சுத்தியலின் மேற்பகுதியில் வட்டமாக பள்ளம் பதிக்கப்பட்டுள்ளது. இரும்பு தாதுவை கல் சுத்தியல் கொண்டு சிறிதாக உடைத்து, அவற்றை ஊது உலையிலிட்டு உருக்கி இரும்பை தனியாக பிரிக்க பயன்படுத்தியுள்ளனர். இரும்பு தாதுக்களை உருக்க, அதிக வெப்பம் தேவை என்பதால் ஊது உலையில் அதிக அழுத்தத்துடன் காற்றை செலுத்த சிறிய துளைகள் கொண்ட சுடுமண் குழாய்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இங்கு நீள்வட்ட வடிவிலான 2 சுடுமண் உலைக்களங்கள் புதைந்த நிலையில் உள்ளன. திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் இரும்பு தாதுக்கள் கிடைக்கின்றன. இதனால் இப்பகுதிகளில் பெருங்கற்கால நினைவு சின்னங்களுடன் இரும்பு உருக்காலையின் தடயங்கள் காணப்படுகின்றன.

இங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள், இரும்பு உருக்காலையின் தடயங்கள் போன்று கிருஷ்ணகிரி மாவட்டம் மோதூர் அகழாய்விலும் கிடைத்துள்ளது. மயிலாடும்பாறை அகழாய்வில் கிடைத்த மாதிரிகளின் காலக்கணிப்புகள் மூலம் தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாட்டை மக்கள் அறிந்திருந்தனர் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் தொல்பொருட்கள் மூலம் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கும் தொழிற்சாலை இவ்வூரில் இருந்திருப்பதை அறிய முடிகிறது.

தெற்கே 300 மீட்டர் தொலைவில் பெருங்கற்கால கல் வட்டம், கல் திட்டை ஆகியவை சிதைந்த நிலையில் உள்ளன. அகழாய்வு மூலம் இதை வெளிக்கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இருமல், பாம்புக்கடி, நீரிழிவு ஆகிய நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும் கொக்கிமுள் ஆதண்டை (Capparis sepiaria) என்ற அரியவகை மூலிகை தாவரம் இப்பகுதியில் இயற்கையாக வளர்ந்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.

Related Stories: