ராஜபாளையத்தில் அதிகாலையில் பரபரப்பு..ஹார்டுவேர்ஸ் கடையில் பயங்கர தீ.: ரூ.80 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் ஹார்டுவேர்ஸ் கடையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் பசும்பொன் என்பவருக்கு சொந்தமான ஹார்டுவேர்ஸ் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின், கடையை அடைத்து விட்டு பசும்பொன் மற்றும் பணியாளர்கள்

சென்றனர். நேற்று அதிகாலை இந்தக் கடையில் திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது. கடையிலிருந்து கரும்புகை வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனே ராஜபாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலை அதிகாரி ஜெயராமன் தலைமையில் 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கட்டிடத்தின் முகப்பு பகுதி சிறியதாக இருந்ததாலும், கட்டிடம் முழுவதும் தீப்பற்றி எரிந்ததாலும் கடையின் ஷட்டரை உடைத்து திறக்க முடியவில்லை. இதையடுத்து ஜேசிபி மூலம் ஷட்டரை உடைத்து, கடைக்குள் சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பைப், கதவு, பாலிசிங் சீட் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமடைந்தன. தீயில் எரிந்த பொருட்களின் மதிப்பு ரூ.80 லட்சம் என கூறப்படுகிறது. தீ விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணத்தால் தீ பற்றியதா என ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: