அதிகாரிகள் அலட்சியம் புதிதாக போடப்பட்ட 2 நாளில் பெயர்ந்துபோன ஓஎம்ஆர் சாலை

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக ஓஎம்ஆர் சாலை மற்றும் பல்வேறு முக்கிய சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் புதைக்கப்பட்டன. இதனால் மாமல்லபுரம் சாலை, அய்யம்பேட்டை தெரு, பழைய மாமல்லபுரம் சாலை, செங்கல்பட்டு தார் சாலைகள் பெயர்க்கப்பட்டதால் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சி அளித்தது. மேலும் சாலை முழுவதும் தூசிபடலமாக மாறியது. இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலை துறையினர் திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, பேரூராட்சி தலைவர் மு.தேவராஜ் ஆகியோருடன் ஆய்வு செய்தனர்.

பின்னர், பாதாள சாக்கடை பணிகள் முடிந்து ஒப்படைப்பு செய்ததும் புதிய சாலை அமைக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்படி கடந்த 15 நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்து ஓஎம்ஆர் சாலை நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 26ம் தேதி இள்ளலூர் சந்திப்பு அருகில் புதிய சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் சாலை அமைக்கப்பட்ட 2 நாட்களுக்குள் பல இடங்களில் சாலை பெயர்ந்துவிட்டது.

பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சரிவர மூடாமல் அப்படியே தாரைக்கொட்டி சாலை அமைத்ததால் புதிதாக அமைக்கப்பட்ட சாலை 2 நாட்களில் பெயர்ந்துவிட்டது என ஒப்பந்ததாரர்கள் மீது சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  எனவே, திருப்போரூர் பகுதியில் புதியதாக போடப்பட்ட ஓஎம்ஆர் சாலையை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: