கணவரை அழைத்து வர சென்றபோது பரிதாபம்: இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி மனைவி பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஊருக்கு சென்று திரும்பிய கணவரை அழைத்து வர இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். காஞ்சிபுரம் ஏகாம்பரபுரம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமேஸ்வரி வயது (37)  என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில், கரூர் மாவட்டத்திலுள்ள உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு ஆறுமுகம் நேற்று அதிகாலை காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். இதனையடுத்து, தனது கணவர் ஆறுமுகத்தை அழைத்து செல்ல அவரது மனைவி பரமேஸ்வரி தனது இருசக்கர வாகனத்தில் மாநகராட்சி அலுவலகம் அருகே அன்னை இந்திரா காந்தி சாலை  வழியாக சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, சாலையில் இருந்த புதைவடிகால் இணைப்பு பள்ளத்தினை தவிர்ப்பதற்காக வலது பக்கமாக தனது இரு சக்கர வாகனத்தை சற்று வளைத்துச் சென்றபோது சற்றும் எதிர்பாராத விதமாக இவரது இரு சக்கர வாகனத்தில் பின்னால் அதிவேகமாக வந்த லாரி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பரமேஸ்வரி உடல் நசுங்கி பரிதாபமாக பலியானர்.

இதையடுத்து, இவ்விபத்து குறித்து தகவலறிந்த சிவகாஞ்சி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரிதாபமாக உயிரிழந்த பரமேஸ்வரின் சடலத்தை கைபற்றி  பிரேதப் பரிசோதனைக்காக  காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரான சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்த ஆனந்த்குமார் (37) என்பவரை கைது செய்து லாரியினையும் பறிமுதல் செய்தனர். பின்னர், போலீசார் லாரி ஓட்டுனரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Related Stories: