மதுரை: அதிமுக ஆட்சியில் மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கியதில் நடைபெற்ற ரூ.37.5 கோடி ஊழல் குறித்து உடனடியாக விசாரிக்கக்கோரிய வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. மதுரையை சேர்ந்த மோகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கடந்த 2011ல் அதிமுக ஆட்சியில், அதிநவீன வசதி கொண்ட வாக்கி - டாக்கி மீனவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு ரூ.57 கோடி முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி 3 டவர்கள் அமைக்கப்பட்டு, 3,100 வாக்கி டாக்கி வழங்க திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், இதே திட்டம் 2008ல் ரூ.7 கோடி செலவில் திட்டமிடப்பட்டிருந்தது.
மீனவர்களுக்கு வழங்கிய வாக்கி - டாக்கி திட்டத்தில் ரூ.37.5 கோடி ஊழல் நடந்திருக்கிறது. இதுகுறித்து ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் விசாரணை செய்ய மனு அளிக்கப்பட்டது. எனவே, மீனவர்களுக்கு வழங்கிய வாக்கி டாக்கியில் நடைபெற்ற ஊழலை உடனடியாக விசாரணை செய்து முடிக்க உத்தரவிட வேண்டும்’’என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் தரப்பில், ‘‘இதுபோன்ற புகார்கள் தொடர்பாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விசாரணை நடைபெற்று வருகிறது’’ என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, ‘‘இந்த புகாருடன் எத்தனை மனுக்கள் பெறப்படும்? பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.