மதுரை: விவசாய பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில், வேளாண்மைத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்கப்பயிற்சி, உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் குறித்த மண்டல அளவிலான கூட்டம் நேற்று நடந்தது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.பின்னர் அவர் அளித்த பேட்டி : வேளாண்மைத்துறைக்கு தனி பட்ஜெட் போடப்பட்டதால் கூடுதல் நிதிகள் கிடைத்துள்ளது. தமிழகத்தில் ஒரே ஆண்டில் 46 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு, வேளாண்மைத்துறை சாதனை படைத்துள்ளது. பாரம்பரிய நெல் வகைகளை சந்தைப்படுத்தலில் சவால்கள் உள்ளன. விவசாயப்பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. படித்த இளைஞர்கள் விவசாய மதிப்புக்கூட்டு பொருட்களை சந்தைப்படுத்த முன்வர வேண்டும்.