சென்னை : சசிகலா வருகிற 26ம் தேதி முதல் புரட்சிப்பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், தமிழ் மண்ணின் உரிமைகளை காத்திடவும், பெண்ணினத்தின் பெருமைகளைப் பேணி காத்திடும் வகையிலும் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் புரட்சிப்பயணத்தை தொடங்குகிறார். சத்துணவு கண்ட சரித்திர நாயகனின் பெருமைகளையும், தாலிக்கு தங்கம் தந்த தவப்புதல்வியின் எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான பயணமாக மேற்கொள்ளவிருக்கிறார்.புரட்சிப்பயணத்தை வருகின்ற 26-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12.30 மணிக்கு, தியாகராய நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு கோயம்பேடு, பூந்தமல்லி, திருவள்ளூர் ரோடு வழியாக திருத்தணி பைபாஸ் சென்றடைகிறார். பின்னர் திருத்தணி பைபாஸிலிருந்து தனது புரட்சிப்பயணத்தை தொடங்கும் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் திருத்தணி, குண்டலூர் ஆகிய பகுதிகளில் உள்ள கழக தொண்டர்களையும், பொது மக்களையும் சந்திக்கிறார். அச்சமயம் குண்டலூரில் அமைந்துள்ள புரட்சித்தலைவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.