வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த போலீஸ்காரரின் டூவீலர் தீவைத்து எரிப்பு

திருப்பரங்குன்றம்: வீட்டுவாசல் முன்பு நிறுத்தியிருந்த போலீஸ்காரரின் டூவீலர் தீவைத்து எரிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ராஜ்குமார் (29). இவர் மதுரை மாநகர் காவல் துறையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று வெளியில் சென்று விட்டு இரவு டூவீலரை வழக்கமாக நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு தூங்க சென்றார். அதிகாலை 2 மணியளவில் வீட்டின் வாசலில் திடீரென வெளிச்சமாக தெரிந்ததையடுத்து வீட்டின் கதவை திறந்து பார்த்த போது வாசலில் இருந்த டூவீலர் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். இருப்பினும் டூவீலர் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ்காரரின் டூவீலருக்கு தீவைத்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: