புதுடெல்லி: வரும் 26, 27ம் தேதிகளில் ஜெர்மனியில் நடக்கும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி செல்கிறார். நபிகள் நாயகம் சர்ச்சைக்கு இடையே 28ம் தேதி அமீரகத்துக்கும் அவர் செல்கிறார். 48வது ஜி-7 மாநாடு வரும் 26, 27ம் தேதிகளில் ஜெர்மனியில் நடைபெற உள்ளது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும்படி பிரதமர் மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று மோடி ஜெர்மனி செல்ல உள்ளார். இது குறித்து வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸின் அழைப்பின் பேரில், ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜூன் 26, 27ம் தேதிகளில் ஜெர்மனி செல்கிறார். இந்த கூட்டதில் சுற்றுச்சூழல், எரிசக்தி, காலநிலை, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம், மற்றும் ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசுவார்.