குடியாத்தம் : குடியத்தம் பகுதியில் கனமழையால் புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதனை நெடுஞ்சாலை, மின்வாரியத்துறையினர் அகற்றினர். குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் மற்றும் அனல் காற்று வீசி வந்தன. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 6 மணி முதல் விட்டுவிட்டு பரவலாக மழை பெய்தது. மேலும், இரவு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்நிலையில், மழையால் குடியாத்தம் காட்பாடி நெடுஞ்சாலையில் தலைமை தபால் நிலையம் அருகே அதிகாலை பெரிய புளிய மரம் ஒன்று வேரோடு சாலையில் சாய்ந்தது. மேலும், மரத்தின் அருகில் இருந்த மின் கம்பங்களும் உடைந்து சேதம் ஏற்பட்டது. இதனால் குடியாத்தம் காட்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. மேலும், குடியாத்தம் காட்பாடி சாலை, தலைமை தபால் நிலையம், என்.ஜி.ஓ காலனி, திருமகள் மில், உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் மற்றும் மின்வாரிய துறையினர் சாலையில் விழுந்த புளியமரம் மற்றும் மின் கம்பங்களை அகற்றினர். மரம் சாயும் போது அங்கு யாரும் இல்லாததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.