குருவாட்டுச்சேரியில் விஏஓவை கண்டித்து கிராம நிர்வாக அலுவலகத்தை பெண்கள் திடீர் முற்றுகை: சான்றிதழ் பெற அழைக்கழிப்பதாக புகார்

கும்மிடிப்பூண்டி: குருவாட்டுச்சேரி ஊராட்சியில் விஏஓவை கண்டித்து கிராம நிர்வாக அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள குருவாட்டுச்சேரி ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் பாக்கிய ஷர்மா. இவர் குருவாட்டுச்சேரியில் பணியமர்த்தப்பட்ட நாள் முதல் கிராம நிர்வாக அலுவலகம் பூட்டியே இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவர் அரசாங்கத்தால் கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் தனியார் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு கிராம மக்களை அலைகழிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது கொரோனா கால கட்டத்தை தாண்டி பள்ளி, கல்லூரிகள் முழுநேரமாக திறந்து செயல்பட ஆரம்பித்துள்ளது. ஆனால் கிராம நிர்வாக அலுவலகம் பூட்டியே கிடப்பதால் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு மாணவர்களுக்கு தேவையான சாதி, இருப்பிடம் மற்றும் வருமான சான்றிதழ்கள் பெற பொதுமக்கள் அலைய வேண்டிய சூழல் உள்ளது. மேலும், இவர் முறையான விசாரணை இன்றி சான்றிதழ்களை நிராகரிப்பதாகவும், மாணவர்களின் சேர்க்கை நேரத்திலும் சான்றிதழ்கள் தயார் செய்ய வாரக்கணக்கில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை அலைய விடுவதாகவும் பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பூட்டியே கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகத்தை 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று முற்றுகையிட்டனர். அப்போது உடனடியாக கிராம நிர்வாக அலுவலரை இட மாற்றம் செய்ய வேண்டும். அதேபோல் அரசு கட்டிடத்தை புறக்கணித்து சொகுசு கட்டிடத்தை பயன்படுத்தும் இவர் போன்ற அரசு அதிகாரிகள் மீது திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் பாரபட்சமின்றி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: