ஆசிரியர்களுக்கான நியமன தேர்வு அரசாணையை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு நியமனத் தேர்வு என்ற அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஏறக்குறைய 60 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் இதுவரை பணி கிடைக்காமல் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஒன்பது ஆண்டுகள் பணிக்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு நியமனத் தேர்வு என்ற அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.  அதோடு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இவர்கள், பணி வழங்ககோரி கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள். இவர்கள்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த வழக்குகள் இவர்களை பாதிப்பதாக அமைந்துள்ளது.

ஆகவே தமிழக அரசு அந்த வழக்குகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறது. அந்த அறிவிப்பை தாமதம் இல்லாமல்  நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கடந்த காலங்களில் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

தற்பொழுது அவர்களின் பதிவு மூப்பு மற்றும் தேர்ச்சி மூப்பின் அடிப்படையில் அவர்களுக்கு படிப்படியாக பணிவழங்க வேண்டும். தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. ஆகவே வருங்கால மாணவர்களின் கல்வியை மனதில் கொண்டும், தகுதியுள்ள ஆசிரியர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டும், தமிழக அரசு உடனடியாக பணி வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: