பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 91,பிளஸ் 2வில் 96% தேர்ச்சி-68 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், நேற்று வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 91 சதவீதம் பேரும், பிளஸ் 2வில் 96 சதவீதம் ேபரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. அரசு பள்ளி, நகராட்சி பள்ளி, சுயநிதி பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளி உள்பட மொத்தம் 86 பள்ளிகளில் படித்த 5289 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

கல்வி மாவட்டத்திற்குட்பட்ட வால்பாறை, பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் உள்ள மொத்தம் 39 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி வளாகம் முன்பு, காலை 10 மணியளவில் மாணவர்கள் பெயர் மற்றும் மதிப்பெண் பட்டியலுடன் தகவல் அறிக்கை இடத்தில் ஒட்டப்பட்டது. அந்தந்த பள்ளிகளில் வெளியிடப்பட்ட தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண்களை மாணவர்கள் ஆர்வமுடன் பார்க்க சென்றனர்.

மேலும், எஸ்எம்எஸ் மூலம் மாணவர்களின் செல்போன்களுக்கு அனுப்பப்பட்டது.  வெற்றிபெற்ற மாணவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 5289 பேரில் மாணவர்கள் 2249 பேர், மாணவிகள் 2564 பேர் என மொத்தம் 4813 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 91 சதவீதமாகும்.

மேலும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் வால்பாறை அருகே சின்கோனா அரசு பள்ளியும், காடாம்பாறை அரசு பள்ளியும், பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியும், வாட்டர் பால்ஸ் எஸ்டேட் அரசு பள்ளியும் என 4 அரசு பள்ளிகளும், வால்பாறை தூய இருதய பெண்கள் மேல்நிலை அரசு உதவிபெறும் பள்ளியும், 33 தனியார்  பள்ளிகளும் என மொத்தம் 38 பள்ளிகள் 10ம்வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வை பொள்ளாச்சி மற்றும் வால்பாறை, தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, ஆதிதிராவிட நலப்பள்ளி, சுயநிதிபள்ளி, நகராட்சி பள்ளி, மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 78 மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் மொத்தம் 4559 பேர் எழுதினர். இந்த பொதுத்தேர்வு 31 மையங்களில் நடைபெற்றது. நேற்று வெளியான முடிவில் கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் 4559 பேரில் மாணவர்கள் 1873 பேர், மாணவிகள் 2487 பேர் என மொத்தம் 4360 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி வீகிதம் 96சதவீதமாகும்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில், வால்பாறை அருகே அட்டக்கட்டி அரசு மேல்நிலை பள்ளி 100சதவீதம் தேர்ச்சி பெற்றது. அதுபோல், அரசு உதவிபெறும் பள்ளியில் வால்பாறை தூய இருதய பள்ளியும், 100சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மேலும், 28 தனியார் என மொத்தம் 30 பள்ளிகள் 100சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: