திருவொற்றியூர்: மணலி பாடசாலை தெருவில் சென்னை மாநகராட்சியின் ஆரம்பப் பள்ளி உள்ளது. 1932 ஆண்டு துவங்கப்பட்ட இந்த பள்ளியில் தற்போது ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை சுமார் 1100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த பள்ளியில் 12 கட்டிடங்களும் 19 வகுப்பறைகளும் உள்ளன. இதில் பெரும்பாலான கட்டிடங்கள் 25 ஆண்டுகள் பழமையானது. இதனால் இந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு ₹9 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்ட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. இந்த நிலையில் கோடை விடுமுறை இந்நிலையில், நேற்று அதிகாலை பெய்த மழையால் பள்ளியின் பல வகுப்பறையில் மழைநீர் கசிந்தது. பள்ளி கட்டிடம் பழுதடைந்து இருப்பதால் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி நேற்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு, பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர்கள் அனைவரும் பெற்றோர்களின் பாதுகாப்புடன் வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.