பாலவாக்கம் கிராமத்தில் பழுதடைந்த ஊராட்சி அலுவலக கட்டிடம்: புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

ஊத்துக்கோட்டை: பாலவாக்கம் கிராமத்தில் பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம் பாலவாக்கம் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசு ஊழியர்கள், தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள் என 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்கள் குடிநீர் வரி, வீட்டு வரி, தொழில் வரி, சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை கட்டுவதற்கு ஊராட்சி அலுவலகம் சென்று தான் கட்டவேண்டும்.

ஆனால் ஊராட்சி அலுவலக கட்டிடம் சேதம் அடைந்து மழைக்காலங்களில் மழை நீர் கசிந்து அலுவலகத்தின் உள்ளே உள்ள முக்கிய கோப்புகள் நனைந்தது. இதனால் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதனால் இதை யாருமே பயன்படுத்தவில்லை. இந்நிலையில், கடந்த 10 வருடமாக ஊராட்சி அலுவலகம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்தது. பின்னர் தற்போது அங்குள்ள இ-சேவை மையத்தில் செயல்பட்டு வருகிறது. பாலவாக்கத்தில் வசிக்கும் மக்கள் தாங்கள் செலுத்தவேண்டிய வரிகளை இ-சேவை மையத்தில் செயல்படும் ஊராட்சி அலுவலகத்தில் கட்டி வருகின்றனர். மேலும் பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மரத்தடியில் கிராம சபை

அப்பகுதி மக்கள் கூறியதாவது, `பாலவாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி அலுவலகம் கடந்த 9 வருடத்திற்கு மேலாக பழுதடைந்துள்ளது. இதனால் குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் நடைபெறும் கிராம சபை கூட்டங்கள் மற்றும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் ஆகியவை ஊராட்சி அலுவலகத்தில் நடைபெறாமல் பள்ளிக்கூட வளாகங்கள் மற்றும் கிராமத்திலுள்ள மரத்தடி ஆகிய பகுதிகளில் தான் நடைபெற்று வருகிறது. எனவே விரைவில் புதிதாக ஊராட்சி அலுவலகம் கட்டவேண்டும். அல்லது அதை சீரமைக்க வேண்டும்’ என கூறினர்.

Related Stories: