புதுடெல்லி: வீடுகளை புல்டோசர்கள் கொண்டு இடிக்கும் விவகாரத்தில் மூன்று நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உபி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நபிகள் நாயகத்தை பாஜ முன்னாள் நிர்வாகிகள் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் உள்ளிட்டோர் சமீபத்தில் அவதூறாக பேசி இழிவுபடுத்தினர். இதை கண்டித்து உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டங்கள் மிக மோசமான மத கலவரமாக வெடித்தது. இதையடுத்து வன்முறைக்கு காரணமானவர்கள் என கருதப்படும் நான்கு பேரை அடையாளப்படுத்தி அவர்களது வீடுகளை புல்டோசர்கள் மூலமாக உ.பி. அரசு இடித்து தரைமட்டமாக்கியது. அதேப்போன்று கலவரத்தை தூண்டுகிறவர்கள் மற்றும் ஈடுபடுபவர்கள் என்று சந்தேகிக்கும் நபர்களின் வீடுகளையும் இடிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் சட்டவிரோதமாக வீடுகளை புல்டோசர்கள் கொண்டு இடிக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என ஜமியத் உலேமா ஏ ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு தொடர்ந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் போபன்னா மற்றும் விக்ரம் நாத் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சியு சிங், ‘‘குண்டர்கள், கல்லால் அடிப்பவர்கள், கலவரத்தை தூண்டுபவர்கள் என்று சந்தேகப்படக் கூடிய நபர்களின் வீடுகளை எந்தவிதமான முன் எச்சரிக்கையும் இல்லாமல் இடித்து தள்ளுகின்றனர். அதுகுறித்து கேட்டால் இடிக்கப்படும் கட்டிடங்கள் அனைத்தும் சட்டவிரோத கட்டிடங்கள் என தெரிவிக்கின்றனர். உண்மையை கூற வேண்டுமானால் சுதந்திரத்திற்கு முன்பாக அவசரநிலை காலத்தில் கூட இப்படியான ஒரு செயல்பாடு நடந்தது கிடையாது. சம்பந்தப்பட்ட நபர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய பெற்றோர்களின் வீடுகளும் இடித்துத் தள்ளப்படுகிறது. இந்தியா மாதிரியான குடியரசு நாட்டில் இதுபோன்ற சட்ட விரோதமான செயல்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள கூடியதல்ல.