திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில் தார் சாலை அமைக்க ஜல்லி கற்கல் கொட்டப்பட்டநிலையில், கடந்த 2 மாதங்களாக பணி கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளுக்காக பேரூராட்சியில் உள்ள பல்வேறு தெருக்கள், சாலைகளின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் புதைக்கப்பட்டன. இதன் காரணமாக நான்கு மாடவீதிகள், சான்றோர் தெரு, வணிகர் தெரு, புதுத்தெரு, திரவுபதை அம்மன் கோயில் தெரு, கன்னியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல தெருக்களில் மக்கள் நடமாட முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக மாறின. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் கந்தசுவாமி கோயில் தேரோட்டம் நடைபெற்றதால் நான்கு மாடவீதிகள் மட்டும் சீரமைக்கப்பட்டது. பின்னர், திருவஞ்சாவடி தெரு, சிதம்பர சுவாமிகள் மடம் தெரு உள்ளிட்ட சாலைகள் புதியதாக மாற்றப்பட்டன.