வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்தில் பள்ளி திறந்த முதல் நாளே மாணவ, மாணவியர்க்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. கோடை விடுமுறைக்குப்பின் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட களியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நேற்று துவங்கின. இதனையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் பூக்கள் கொடுத்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசிஆறுமுகம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் மோகனகாந்தி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரஞ்சித்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் ஊராட்சி துணை தலைவர் சக்திவேல் உட்பட ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.