சென்னை: மின் துறையில் வேலை வாங்கித்தருவதாக ரூ.27 லட்சம் பணம் பெற்று மோசடி செய்து விட்டதாக, முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது அதிமுக மீனவரணி மாவட்ட பொருளாளர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வடசென்னை அதிமுக மீனவரணி பொருளாளர் கந்தசாமி நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் புதுவண்ணாரப்பேட்டை பூண்டித்தங்கம்மாள் தெருவில் வசித்து வருகிறேன். நான் அதிமுகவில் மீனவரணி வடசென்னை மாவட்ட பொருளாளராகவும் உள்ளேன். அதிமுக ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன், மின்துறையில் வேலை வாங்கி தருகிறேன். யாராவது இருந்தால் பணத்துடன் அழைத்துவா என்று கூறினார். இதனால், உதவி இன்ஜினியராக விரும்பிய 6 பேரிடம் ரூ.27 லட்சம் பணத்தை நான் வாங்கிக் கொடுத்தேன்.