இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள 2,042 கோயில்களில் திருப்பணிகள் நடத்த ஒப்புதல்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள  2042 கோயில்களில் திருப்பணிகள் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு, இதுவரை 157 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கை: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள முதற்கட்டமாக கோயிலை தொல்லியல் வல்லுநர் நேரில் ஆய்வு செய்து 100 மற்றும் 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான கோயிலா அல்லது கட்டப்பட்ட கோயிலா என்பதை கண்டறிந்து பழமை வாய்ந்த தொன்மையான கோயிலை பழமை மாறாமல் புதுப்பிக்க உத்தரவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திருக்கோயில் செயல் அலுவர்கள், நிர்வாகியால் அக்கோயிலில் மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகள் தொடர்பாக புகைப்படங்கள் மற்றும் குறிப்புகள் பவர் பாயிண்ட்டில் தயார் செய்யப்பட்டு மண்டல வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில் கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருப்பணிகள் குறித்து மண்டல வல்லுநர் குழு பரிசீலனை செய்து மாநில அளவிலான வல்லுநர் குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டு அனுமதி அளிக்கப்ட்டு வருகிறது. மாநில அளவிலான வல்லுநர் குழு கடந்த ஓராண்டில் தஞ்சாவூர் 141 கோயில்கள், திருச்சி 137 கோயில்கள்,

நாகப்பட்டினம் 137 கோயில்கள், கடலூர் 131 கோயில்கள், திருப்பூர் 129 கோயில்கள், விழுப்புரம் 118 கோயில்கள், ஈரோடு 112 கோயில்கள்,  மயிலாடுதுறை 108 கோயில்கள், சென்னை-2 103 கோயில்கள், தூத்துக்குடி 102 கோயில்கள், திருநெல்வேலி 92 கோயில்கள், சேலம் 91 கோயில்கள், வேலூர் 89 கோயில்கள், திருவண்ணாமலை 88 கோயில்கள், காஞ்சிபுரம் 85 கோயில்கள், சென்னை-1   82 கோயில்கள், சிவகங்கை  81 கோயில்கள், கோவை 81 கோயில்கள், மதுரை 76 கோயில்கள், திண்டுக்கல் 59 கோயில்கள் உட்பட்ட 20 மண்டலங்களில் 2042 கோயில்களுக்கு மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகளை பரிசீலித்து ஆலோசனைகள் மற்றும் ஒப்புதல்கள் வழங்கப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றது.

தமிழகத்தில் இதுவரை 157 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. சென்னை, நுங்கம்பாக்கம் இந்து சமய ஆணையர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெற்று வரும் வல்லுநர் குழுவில் குறைந்தது 150 கோயில்களின் திருப்பணி வேலைகளை பரிசீலினை செய்து ஒப்புதல்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: