சென்னை: முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டதாக பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அண்ணாமலை மேடையில் பேசியுள்ளார். அப்போது அவர், திமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டதாக கூறியுள்ளார். அவர் பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்க்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகனும், திமுக எம்.பி கலாநிதி வீராசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, தனது கொள்ளு பேரனின் பிறந்தநாள் விழாவில் நேற்று குடும்பத்துடன் கலந்துகொண்டு மகிழ்ந்த ஆர்காட்டார் (என் தந்தை) குறித்து எப்போதும் எங்கள் தலைவர்களை பற்றி உளறும் பா. ஜ.க. தலைவர் @annamalai_k இன்று தவறான கருத்தை கூறியதற்கு வேதனையுடன் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் நலமாக உள்ளார் என பதிவிட்டு இருந்தார். அதற்க்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதாவது, உங்களுடைய தந்தையார் அண்ணன் ஆற்காட்டார் அவர்கள் நீண்ட ஆயுளோடு உங்கள் அனைவருடைய அரவணைப்போடு நன்றாக வாழ்வதற்கு இறைவனை வேண்டுகிறேன். நாமக்கல் பொதுக்கூட்டத்தில் தவறுதலாக உங்களுடைய தந்தையார் இறைவனடி சேர்ந்து இருக்கின்றார் என்று சொன்ன கருத்துக்காக வருந்துகின்றேன் என கூறியுள்ளார்.