ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருத்தணி: கீழாந்தூர் கிராமத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. திருத்தணி அடுத்த கீழாந்தூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமைவாய்ந்த ஸ்ரீ தேவி, பூதேவி ஆதிகேசவ பெருமாள் கோயில் உள்ளது. இது கிபி 9ம் நூற்றாண்டில் குலோத்துங்க மன்னனால் கட்டப்பட்டது. சிதலமடைந்து காணப்பட்ட இந்த கோயிலை ஊர்மக்கள் சேர்ந்து நிதி வசூல் செய்து கடந்த ஓராண்டாக சீரமைத்தனர். இதையடுத்து, நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இதற்கு முன்னதாக, கோயில் வளாகத்தில் யாக குண்டம், யாக கலசம் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். இந்நிலையில், நேற்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் கோபுர கலசம் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது, அங்கிருந்த பக்தர்கள், “கோவிந்தா, கோவிந்தா” என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர். பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.இதில், சிறப்பு விருந்தினராக எஸ்.சந்திரன் எம்எல்ஏ, திருத்தணி தளபதி கே. விநாயகம் கல்வி அறக்கட்டளை தாளாளர் பாலாஜி, முன்னாள் நகர மன்ற துணை ரகுநாதன், தொழிலதிபர் ஜெகநாதன், பாமக பிரமுகர்கள் கார்த்திக் பொன்னுசாமி, மோகன், புலவர் தேவராஜன், ஊராட்சி மன்ற தலைவர் நாகம்மாள், துணைத் தலைவர் கோகிலா குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை, கீழாந்தூர் கிராமத்தை சேர்ந்த பரமசிவம், எலக்ட்ரிஷியன் துரைமுருகன், நாகபூஷணம், வீரபத்திர கார்த்தி, கோதண்டம் உள்பட பலர் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: