ஒசோடப்பன் சுவாமி கோயில் திருவிழாவில் 100 கிடா வெட்டி கறி விருந்து: ஆயிரம் பேர் பங்கேற்பு

மேட்டூர்: மேட்டூர் வனப்பகுதியில் ஒசோடப்பன் சுவாமி கோயில் திருவிழாவில், நேற்று 100 கிடா வெட்டி பக்தர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.சேலம் மாவட்டம், மேட்டூர் வனசரகத்திற்கு உட்பட்ட பெரியதண்டா வனப்பகுதியில், ஒசோடப்பன் சுவாமி கோயில் அமைந்துள்ளது. பழமையான இந்த கோயில், மாரிமடுவு பகுதியில் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ளது.

வீரப்பன் பெயர் பொறித்த பெரிய வெண்கல மணியும், இங்கு வீரப்பனால் வைக்கப்பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், யானைகள் நிறைந்த பகுதி என்பதாலும், இந்த கோயிலுக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த பகுதியில் வீரப்பனும், அவரது கூட்டாளிகளும் அடிக்கடி வந்து செல்வதால், அதிரடிப் படையினர் திருவிழா நடத்த அப்போது அனுமதிக்கவில்லை. இதனையடுத்து பெரியதண்டா வனப்பகுதியில் சுவாமி சிலை வைத்து, பொதுமக்கள் வழிபடத் துவங்கினர்.

இந்த கோயில் திருவிழா, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். கொரோனா காலம் என்பதால், கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் நடப்பாண்டு திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விழாவில், கொளத்தூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும், நேற்று கோயிலில் நூற்றுக்கணக்கான கிடாக்களை சுவாமிக்கு பலியிட்டு, பொங்கல் வைத்து, பக்தர்களுக்கு கறி விருந்து வைக்கப்பட்டது. இங்கு பலியிடப்படும் ஆட்டு இறைச்சியை முழுமையாக அன்னதானத்திற்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். இந்த கோயிலில் வெட்டப்பட்ட ஆட்டு இறைச்சியை, பக்தர்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்துச் செல்வதில்லை.

Related Stories: