வேலூர்: 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஆப்சென்டானவர்களை உடனடி தேர்வில் கலந்துகொள்ள செய்ய வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. இதில் முதல் நாள் நடந்த மொழிப்பாடத்தேர்வையே சராசரியாக 40 ஆயிரம் பேருக்கு மேல் எழுதாமல் ஆப்சென்டாகியிருந்தனர். மூன்று பொதுத்தேர்வுகளும் முடிந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 லட்சத்து 25 ஆயிரத்து 534 பேரும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 லட்சத்து 58 ஆயிரத்து 641 பேரும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 4 லட்சத்து 95 ஆயிரத்து 292 பேரும் எழுதவில்லை என்று தெரியவந்தது.
இது பள்ளிக்கல்வித்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் பொதுத்தேர்வை எழுதாமல் ஆப்சென்டானவர்களை உடனடி தேர்வில் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான படிவங்களையும் அது வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்களிடம் கேட்டபோது, ‘கடந்த 2 ஆண்டுகளாக நீடித்த கொரோனா கால நெருக்கடியால் மாணவ, மாணவிகள் மத்தியில் மனரீதியில் பெரும் பாதிப்ைப ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தேர்வின் மீது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் என்றால் நடுத்தர, அடித்தட்டு குடும்பங்கள் கொரோனா கால நெருக்கடியால் பொருளாதார ரீதியில் சிக்கலை சந்தித்துள்ளன. அவர்களின் குடும்பங்களில் 15 முதல் 18 வயது வரை உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் குடும்ப பாரத்தை சுமக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே நாங்கள் அவர்களை அணுகியபோது சரியான பதில் கிடைக்கவில்லை. அதோடு பல குடும்பங்கள் வெளியூரில் செட்டிலாகியுள்ளனர்’ என்றனர்.