பாவூர்சத்திரம் அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு:போலீசார் பேச்சுவார்த்தை

பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அருகே கரிசலூரில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திரண்ட மக்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். பாவூர்சத்திரம் அருகே உள்ளது கரிசலூர் கிராமம். இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே ஏராளமான வீடுகள் உள்ளன. இந்நிலையில் குடியிருப்புகளின் அருகில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது. இதனை அறிந்த கிராம பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டு குடியிருப்புகளின் அருகே செல்போன் டவர் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பாவூர்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து அந்த இடத்தில் செல்போன் டவர் அமைப்பது குறித்து முறையாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்து பேசி தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர். அதன்பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: