இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து சிறுமிக்கு இரண்டு முறை தாலி கட்டிய தனியார் ஊழியர் போக்சோவில் கைது

அண்ணாநகர் : திருமங்கலம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கடந்த 27ம் தேதி திருமங்கலம் காவல் நிலையத்தில் தனது 16 வயது மகளை காணவில்லை என புகார் கொடுத்தார். இந்நிலையில், மேல்மருவத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மிளவுஅழகன்(19) என்பவருடன் சிறுமி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று முன்தினம் இருவரையும் திருமங்கலம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அதில் சிறுமியிடம் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது, சிறுமி கூறியதாவது, `எனக்கு இன்ஸ்டாகிராம் மூலம் மிளவுஅழகனுடன்  பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியதால் இருவரும் கடந்த 2 மாதத்துக்கு முன்பு அண்ணா நகரில் உள்ள ஒரு விநாயகர் கோயிலில் திருமணம் செய்துகொண்டோம். தாலியை பெற்றோருக்கு தெரியாமல் மறைத்து வந்தேன். பெற்றோர் கண்டுபிடித்து தாலியை கழட்டினர்’ என்றாள்.

பின்னர், மிளவுஅழகனிடம் விசாரித்தனர். அதில், `இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம் காரணமாக சிறுமியை காதலிப்பதாக கூறினேன். பின்னர் சிறுமியை கடந்த 27ம் தேதி சென்னையில் இருந்து கடத்திச்சென்று மேல்மருவத்தூரில் உள்ள ஒரு கோயிலில் மீண்டும் தாலிகட்டி அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்தேன்’ என்று கூறினார். இதையடுத்து, போக்சோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மிளவு அழகனை கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சிறுமியை காப்பகத்தில் சேர்த்தனர்.

Related Stories: