உஸ்ஸ்ஸ்... அப்பாடா.... அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு

சேலம்: கோடை வெயிலின் உச்சமான கத்திரி வெயில் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. ஆண்டு தோறும் கோடை காலத்தின் உச்சமான மே மாதத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ என அழைக்கப்படும் கத்திரி வெயில் தொடங்குவது வழக்கம். இக்காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். ஆனால் சமீபகாலமாக கத்திரி வெயிலுக்கு முன்பே வெயில் கொளுத்தி வருகிறது. ஓரளவுக்கு மழை கை கொடுத்ததால் மார்ச் 15ம் தேதிக்கு மேல் தான் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன் சேலம், ஈரோடு, வேலூர், திருச்சி, திருப்பூர், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் 98 முதல் 102 பாரன்ஹீட் வரை வெயிலின் அளவு இருந்தது.

இந்நிலையில் அக்னி நட்சத்திரம் கடந்த மே 4ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் உஷ்ணத்தில் இருந்து தப்பினர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வெளுத்தி வரும் நிலையில் நாளை (28ம் தேதி) அக்னி நட்சத்திரம் நிறைவு பெறுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டில் அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இல்லாமல் விடைபெறுகிறது.  அக்னி நட்சத்திரம் நாளையுடன் விடை பெறுவதால் இனிவரும் நாட்களில் வெயிலின் அளவு படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: