வெளிநாட்டுக்கு கடத்த இருந்த ரூ. 2 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்பு: வாலிபர் கைது

கும்பகோணம்: மயிலாடுதுறை அருகே வெளிநாட்டுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடி மதிப்பிலான 700 ஆண்டுகள் தொன்மையான 2 உலோக சிலைகளை, சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கைப்பற்றினர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் அருகே டி.மணல்மேடு கிராமத்தில் தொன்மையான 2 உலோக சிலைகள் கடத்தி செல்ல பதுக்கி வைத்திருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. இதையடுத்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் சிலைகளை வாங்கும் வியாபாரிகள் போல் தங்களை காட்டிக்கொண்டு சிலை கடத்தல்காரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சிலை கடத்தல்காரன், 2 உலோக சிலைகளுக்கு ரூ.2 கோடி விலை பேசினார். இதையடுத்து சிலை கடத்தல்காரனை நம்ப வைத்து சிலைகளை காண்பித்தவுடன் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் அருகே உள்ள டி.மணல்மேடு ரோட்டு தெருவை சேர்ந்த சுரேஷ்(32) என்பது தெரியவந்தது. அவரிடம் வெளிநாடுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த புத்தமத பெண் கடவுள் உலோகச்சிலை, அமர்ந்த நிலையில் விநாயகர் உலோக சிலை இருந்தது.

இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் இந்திரா வழக்குப்பதிந்து சுரேஷை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்தது. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று காலை ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த சிலைகள் எங்கிருந்து கடத்தப்பட்டது என விசாரிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: