நீட் தேர்வுக்கு பதிவு செய்தோர் எண்ணிக்கை முதன்முறையாக 18 லட்சத்தைத் தாண்டியது!: 10 லட்சம் பெண்கள் விண்ணப்பம்..!!

சென்னை: மருத்துவ படிப்புக்கான நீட் பொதுத்தேர்வை எழுதும் மகளிரின் எண்ணிக்கை முதல் முறையாக 10 லட்சத்தை தாண்டியுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வை எழுத நாடு முழுவதும் சுமார் 18 லட்சம் பேர் பதிவு செய்துள்ள நிலையில், தமிழில் எழுத விண்ணப்பித்திருப்பவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022ம் ஆண்டுக்கான நீட் தேர்வை எழுத முதன் முறையாக 18 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். முந்தைய ஆண்டில் விண்ணப்பித்ததை விட 2 லட்சத்து 57 ஆயிரம் மாணவர்கள்  அதிகமாக பதிவு செய்துள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளாக நீட் தேர்வு, 12 இந்திய மொழிகளில் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டும் தமிழில் எழுதுவதற்கு விண்ணப்பித்திருப்போரின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 1,42,286 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதேபோல நீட் பொதுத்தேர்வை எழுதும் மகளிரின் எண்ணிக்கை முதல் முறையாக 10 லட்சத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் நீட் தேர்வை எழுதுபவர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. 2017ம் ஆண்டு 11 லட்சத்து 40 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதிய நிலையில், இந்த ஆண்டு 18 லட்சத்து 70 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. 2022-2023ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20ம் தேதி இரவு 9 மணி வரை அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

Related Stories: