கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக எஸ்.பி. பாலாஜி சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கோவில்பட்டி கிழக்கு இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையில் எஸ்ஐக்கள் தர்மராஜ், மாதவராஜ் மற்றும் போலீசார் பூரணம்மாள் காலனியில் உள்ள ரைஸ் மில்லில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒரு டன் ரேஷன் அரிசி மூடைகளாகவும், மாவாகவும் வைக்கப்பட்டு, கேரளாவுக்கு லாரியில் ஏற்ற தயார் நிலையில் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் மாவு மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதனை கடத்த முயன்ற கோவில்பட்டி, பூரணம்மாள் காலனியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சிவா (25), அதே ஊர் வள்ளுவர் நகரைச் சேர்ந்த சின்ன கருப்பசாமி மகன் மகாராஜா (18), வடக்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த கன்னிச்சாமி மகன் மற்றொரு மகாராஜா (40) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.