மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கல்?.. உறவினர் தகவல்

இஸ்லாமாபாத்: மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் உள்ளதாக உறவினர் தகவல் தெரிவித்துள்ளார். மும்பையில் 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 250க்‍கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 700க்‍கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரித்துவந்தது. இந்த வழக்கு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுவிட்டனர். ஆனால், இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் தாவூத் இப்ராஹிம், சோட்டாசகீல் உள்ளிட்ட சிலர் தொடர்ந்து தலைமறைவாகவே இருக்கின்றனர்.

அவர்களை சிறப்பு நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்திருக்கிறது. இந்நிலையில் தாவூத் இப்ராஹிம் உறவினரான சகோதரி ஹசீனா மகன் அலிஷா பார்க்கரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் உள்ளதாக கூறினார். பாகிஸ்தானின் கராச்சி நகரில்தான் தாவூத் இப்ராஹிம் தலைமறைக உள்ளார். நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானுக்கு தப்பியோடிய நிலையில், அவரை நாடு கடத்தும் பணியில் ஒன்றிய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

Related Stories: