கோடை விழாவின் ஒருபகுதியாக சுற்றுலா கலை நிகழ்ச்சிகள் துவக்கம்

ஊட்டி:சர்வதேச சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிவார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மே மாதத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் கண்காட்சிகள், சுற்றுலாத்துறை சார்பில் படகு போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக கோடை சீசன் சமயங்களில் நடத்தப்படும் சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டு கோடை விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. நடப்பு ஆண்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது பாதிப்பு முற்றிலும் குறைந்துள்ளதால் கடந்த இரு மாதங்களாக ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து, இம்மாத துவக்கம் முதல் நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி ஆகியவை நடந்து முடிந்துள்ள நிலையில், வரும் 20ம் தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற மலர் கண்காட்சி துவங்க உள்ளது. இதனிடையே, சுற்றுலாத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன. ஊட்டி படகு இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் பரதநாட்டியம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். படகு இல்லத்தில் வரும் 31ம் தேதி வரை இந்நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தொடர்ந்து பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் கிராமிய கலைகள், இன்னிசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளும் துவங்கியுள்ளன. இங்கு 24ம் தேதி வரை நடைபெறும் கலைநிகழ்ச்சிகள், அதன்பின் 31ம் தேதி வரை தாவரவியல் பூங்காவில் நடைபெற உள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: