பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் விழா நேற்று சித்தனாதன் விபூதி நிறுவனம் சார்பில் நடந்தது. தெற்கு மண்டபத்தில் திருஞானசம்பந்தருக்கு 16 வகை அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதன்பிறகு கோயிலின் உட்பிரகாரத்தை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இதனைத்தொடர்ந்து ரிஷப வாகனத்தில் சிவபெருமான் சமேத உமாதேவியார் வடக்கு பிரகாரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தங்கக் கிண்ணத்தில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கப்பட்டது. கோயில் தலைமை குருக்கள் அமிர்தலிங்கம் மற்றும் செல்வசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பூஜைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.