ராஜபாளையம் அருகே தோப்பிற்குள் புகுந்த யானை கூட்டம்-மா, தென்னை மரங்கள் நாசம்

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே தோப்பிற்குள் புகுந்த யானை கூட்டம் தென்னை, மா மரங்களை நாசம் செய்தது. தோப்பிற்குள் யானைகள் புகாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்கு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நச்சாடைபேரி கருப்பசாமி கோவில் உள்ளது. இப்பகுதியில் ஏராளமான தென்னை, மா மரங்கள் உள்ளன.

இப்பகுதிக்குள் யானைக் கூட்டங்கள் வராதவாறு ஏற்கனவே அகழிகள் தோண்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தன. தற்போது அகழிகள் பராமரிக்கப்படாத காரணத்தினால் யானை கூட்டங்கள் விவசாய நிலங்களுக்குள் அடிக்கடி புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. அப்பகுதியில் உள்ள அய்யனார் ராஜா என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பை ஆறுமுகசாமி என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார்.

இப்பகுதியில் இதுவரை யானைக் கூட்டங்கள் வந்ததில்லை. தற்போது முதன்முறையாக நேற்று முன்தினம் நள்ளிரவில் யானை கூட்டங்கள் புகுந்து தென்னை மரங்களையும், மா மரங்களையும் பிடுங்கி சாய்த்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தின.இதுகுறித்து குத்தகைதாரர் ஆறுமுகச்சாமி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சேதத்தின் மதிப்பு ரூ.ஒரு லட்சத்திற்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அரசு உரிய நிவாரணத் தொகை வழங்குமாறும், யானைக் கூட்டங்களை வேறு இடத்திற்கு விரட்டுமாறும் வனத் துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: