சிவாஜி, அம்பேத்கர் மணிமண்டபங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சிவாஜி கணேசன் மற்றும் அம்பேத்கர் மணிமண்டபம் ஆகியவற்றை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை காமராஜர் சாலை மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் 8 அடி உயரமுள்ள முழு உருவச் சிலையை கலைஞர் கருணாநிதி நிறுவி, கடந்த 2006 ஜூலை 21ம் தேதி திறந்து வைத்தார். வழக்கின் காரணமாக இந்த சிலை அகற்றப்பட்டு அரசின் சார்பில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் தற்போது நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில், சிவாஜி கணேசன் திருவுருவ சிலையை மணிமண்டபத்தின் வெளிப்புறத்தில் நிறுவ வேண்டும், என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.  

அதன்பேரில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்திற்கு சென்று, அவரது திருவுருவ சிலையை மணிமண்டபத்தின் வெளிப்புறத்தில் நிறுவுவதற்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது, மணிமண்டப வளாகத்தில் அண்ணல் அம்பேத்கரின் முழு திருவுருவ வெண்கல சிலையினை நிறுவுவதற்கான இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தயாநிதி மாறன் எம்பி, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: