சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் இரவு காளை இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள காளைகளை பிடித்து வருவதற்காக புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த வாலிபர்கள் அன்னூர், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காளைகளை பிடித்து கொண்டு மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் காளைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோவிலை சுற்றி அழைத்து வரப்பட்டது. இதைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் விடிய விடிய காளைகளை இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.