கொடைக்கானல் : கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்து குலுங்கும் லில்லியம் மலர்களை சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கண்டு ரசித்து வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா எதிர்வரும் கோடை விழா, மலர் கண்காட்சிக்கு தயாராகி வருகிறது. இதற்காக பல லட்சம் மலர் நாற்றுக்கள் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டது.
தற்போது அவைகள் சுற்றுலாப்பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் வகையில் பல்வேறு வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன. பல வண்ண ரோஜா மலர்கள், டெல்பீனியம், சால்வியா, டயாந்தஸ், ஹாலண்டுல்லா, பிங்க் ஆஸ்டர் போன்ற பல்வேறு வகை மலர்கள் பூத்து குலுங்கும் சூழலில், நெதர்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட லில்லியம் மலர்கள் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
லில்லியம் மலர் வெள்ளை, சிவப்பு, ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, மெரூன் ஆகிய 5 வண்ணங்களில் பூத்து குலுங்குவதை சுற்றுலாப்பயணிகள் ஆச்சர்யத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர். இந்த வருடம் பிரையண்ட் பூங்கா முழுவதும் அதிக பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ள பல்வேறு வகையான வண்ண மலர்களுக்கு நடுவே லில்லியம் மலர்கள் மட்டும் சுற்றுலாப்பயணிகளிடையே தனி முத்திரை பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. லில்லியம் மலர்கள் பாதுகாப்பான நிழல் வலைகளுக்குள் பாதுகாக்கப்பட்டு உள்ளது. இதை சுற்றுலாப்பயணிகள் சென்று கண்டு ரசித்து வரலாம் என பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.