காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோவில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அத்திவரதர் புகழ் பெற்றதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதுமான காஞ்சிபுரத்தில் உள்ள பழமையும் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவில் தேவராஜ சுவாமி திருக்கோவில். இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு வைகாசி திருவிழா வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருக்கோவில் பட்டாச்சாரியார்கள் திருக்கோவிலில் உள்ள கொடிமரத்தில் கருடாழ்வார் சின்னம் பொறித்த கொடியை ஏற்றினார்கள்.