மசினகுடியில் நள்ளிரவில் குப்பைத்தொட்டியில் காட்டு யானை உணவு தேடிய வீடியோ வைரல்

ஊட்டி: ஊட்டி மசினகுடி அருகே நள்ளிரவில் குப்பைத்தொட்டியில் உணவு தேடிய காட்டு யானையின் வீடியோ வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் காட்டு யானை ஒன்று உலா வந்தது. இந்த யானை அங்குள்ள குப்பைத்தொட்டியில் உணவு ஏதேனும் கிடைக்கிறதா? என தும்பிக்கையால் தேடி, அதில் இருந்த சில உணவுகளை எடுத்து உட்கொண்டுள்ளது.

இதனை அங்கு பணியில் இருந்த சிலர் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் வனத்தை ஒட்டி அமைந்துள்ள கிராமப்பகுதிகளில் குப்பை தொட்டிகளில் சேகரமாகும் குப்பைகளை அன்றைய தினமே மாலைக்குள் அகற்றிவிட்டு இரவு நேரத்தில் காலியாக வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உரிய உத்தரவு பெறப்பட்டவுடன் வனத்துறை மூலம் கண்காணிக்கப்படும்’’ என்றனர்.

Related Stories: