ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2010ம் ஆண்டு முதல் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் தொல்பொருட்களை அடையாளம் காணவும், கல்வெட்டுகளை படிக்கவும், படியெடுக்கவும் அறிந்துள்ளனர். இந்நிலையில் 10ம் வகுப்பு மாணவர்கள் மனோஜ், ராம்குமார், பிடல் காஸ்ட்ரோ, அஸ்வின் ராஜ், பாலாஜி ஆகியோர் பொக்கனாரேந்தல் தொடக்கப்பள்ளி அருகே உள்ள வயல் பகுதியிலும், சேதுபதி அரண்மனையின் கிழக்கிலுள்ள வயல்களிலும், சீன நாட்டு பீங்கான் ஓடுகளை கண்டெடுத்து தொல்லியல் ஆய்வாளர் ராஜகுருவிடம் கொடுத்துள்ளனர். இதுகுறித்து ராஜகுரு கூறியதாவது: சீன நாட்டு பீங்கான் பாண்டங்களில் இரு வகை உள்ளன. இப்பீங்கான் ஓடுகளை உன்னிப்பாக பார்த்தால், உள், வெளிப்பகுதிகளில் வலைப்பின்னல் போன்ற அமைப்பு காணப்படும். வெள்ளைக் களிமண்ணால் உருவாக்கப்பட்டு அதன் மேல் உருவங்கள், வடிவங்கள் வரைந்து பின் உப்பு பூச்சு மூலம் பளபளக்கச் செய்து, ஒரு வகை பீங்கான் பாண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு கிண்ணம், குடுவை, தட்டு, ஜாடி போன்றவற்றின் உடைந்த ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.