நாமக்கல் அருகே ஆய்வுக்கு வந்த பெண் அதிகாரியை சிறை வைத்த அங்கன்வாடி அமைப்பாளர்: அதிரடி சஸ்பெண்ட்

நாமக்கல்: நாமக்கல் அருகே லக்கம்பாளைத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, அமைப்பாளராக சசிகலா பணியாற்றி வருகிறார். அங்கு சில ஆண்டாக உதவியாளர் பணியிடம் காலியாக இருந்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு, வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் வித்யாலட்சுமி இந்த  மையத்தில் திடீர் ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது, மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி அமைப்பாளர் சசிகலா, வித்யாலட்சுமியுடன் வாக்குவாதம் செய்தார்.

திடீரென அவரையும், குழந்தைகள் சிலரையும் அங்கன்வாடி மையத்துக்குள் வைத்து அமைப்பாளர் சசிகலா, பூட்டி சிறை வைத்தார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பரிமளாதேவி, மையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி, குழந்தைகள், குழந்தைகள் வளர்ச்சி அலுவலரை மீட்டார். இதுகுறித்த விசாரணை அறிக்கையை பரிமளாதேவி மாவட்ட கலெக்டரிடம் அளித்தார். அதைத்தொடர்ந்து, உயர் அலுவலரை அறைக்குள் வைத்து பூட்டிய அமைப்பாளர் சசிகலாவை சஸ்பெண்ட் செய்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டார்.

Related Stories: