திருமலை: தெலங்கானாவில் 2023ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப்போட்டியிடுவதாக, விவசாயிகள் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறினார். தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகளுக்கான பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு
பேசியதாவது: சோனியாகாந்தியின் முயற்சியால் தெலங்கானா மாநிலம் உருவானது. கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தும் தெலங்கானா மாநிலத்தை ஏற்பாடு செய்தார். தெலங்கானாவில் மக்கள் ஆட்சி அமையும். விவசாயிகள் மற்றும் ஏழைகளின் அரசு அமையும் என்று நினைத்தேன். ஆனால், தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகரராவ் மன்னராட்சி போன்று தான் நினைத்ததை செய்கிறார். சட்டீஸ்கரில் காங்கிரஸ் அரசு ரூ.2,500க்கு குவிண்டால் தானியம் கொள்முதல் செய்கிறது. ஆனால், தெலங்கானா முதல்வர் விவசாயிகளின் குரலுக்கு செவி சாய்க்கவில்லை.