கோத்தபய அரசு பதவி விலக வலியுறுத்தி 2,000 தொழிற்சங்கங்கள் இலங்கையில் கடையடைப்பு: 11ம் தேதி வரை அரசுக்கு கெடு

கொழும்பு: இலங்கையில் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலக வலியுறுத்தி வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் நிதி, பொருளாதார நெருக்கடி காரணமாக ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக வலியுறுத்தி, அரசுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி, தொழிற்சங்கத்தினர் நேற்று நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.வணிக வளாகங்கள் மூடப்பட்டதால், சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இந்த போராட்டத்திற்கு சுகாதாரத் துறை, அஞ்சல் துறை, துறைமுகம், ரயில்வே, போக்குவரத்து துறை, மின்சாரத் துறை, வங்கிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் அமைப்பு என அனைத்து சங்கங்களும் ஆதரவு அளித்தன.

ஒருங்கிணைந்த வர்த்தக செயற்குழுவை சேர்ந்த ரவி குமுதேஷ், `இன்று 2,000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அத்தியாவசியமான அவசர சேவைகள் மட்டும் வழங்கப்படுகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. பதவி விலகாவிட்டால் வரும் 11ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்,’ என்று தெரிவித்தார்.  

நிதியமைச்சர் புலம்பல்

இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் நிதியமைச்சர் அலி சப்ரி, ``இலங்கையில் கடந்த 2019 நவம்பரில் ஜிஎஸ்டி வரி 15 சதவீதத்தில் இருந்து 8% ஆக குறைக்கப்பட்டது. மேலும், 7 இதர வரிகள் நீக்கப்பட்டன. இதனால், 2020 மற்றும் 2021ம் நிதியாண்டுகளில் தலா 5 லட்சம் என மொத்தம் 10 லட்சம் வரி செலுத்துவோர் வரி விலக்கு பெற்றனர். இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு, நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. ஏற்கனவே, 2020ம் ஆண்டில் 9.1% ஆக இருந்த மொத்த ஜிடிபி வருவாய், கணக்கிடப்பட்டிருந்த 8.7% விட குறைந்து, நடப்பாண்டில் 7.7% ஆக சரிவடைந்துள்ளது,’’ என்று தெரிவித்தார்.

Related Stories: