வேலூர் : வேலூரில் வீட்டிற்கு ₹1.60 லட்சம் மின் கட்டணம் வந்ததால் தொழிலாளி குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே, முத்துமண்டபம் டோபிகானா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ராணி. கட்டிட தொழிலாளி. நேற்று முன்தினம் இவரது வீட்டிற்கு வந்த மின்வாரிய ஊழியர், மின்சாரம் கணக்கெடுத்தனர். அப்போது 24,570 யூனிட் ஓடியுள்ளதாகவும், அதற்கு ₹1,60,642 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று மின்சார ரீடிங் அட்டையில் எழுதி கொடுத்துள்ளனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராணி, ‘எங்கள் வீட்டில் ஒரு டிவி, 2 மின்விசிறி, 4 லைட் மட்டுமே உள்ளது. பகலில் வேலைக்கு சென்று விடுவதால் இரவில்தான் பயன்படுத்துவோம். வழக்கமாக ₹90 அல்லது ₹100 மட்டுமே மின் கட்டணமாக வரும். இந்த மாதம் எதற்கு இவ்வளவு கட்டணம்’ என மின் ஊழியரிடம் ேகட்டுள்ளார். அதற்கு மின் ஊழியர், மின்வாரிய அலுவலகத்திற்கு வந்து மனு கொடுங்கள் என கூறிவிட்டு ெசன்றுவிட்டாராம்.
இதுகுறித்து ராணி, தோட்டப்பாளையம் மின்வாரிய அலுவலத்திற்கு சென்று மேலதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று காலை மின்வாரிய ஊழியர்கள், ராணி வீட்டிற்கு சென்று மீட்டரை பரிசோதனை செய்தனர். அதில் மீட்டர் பழுதானது தெரியவந்தது. பின்னர் உடனடியாக புதிய மின் மீட்டர் பொருத்தப்பட்டது.இதுகுறித்து வேலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் நடராஜன் கூறுகையில், ‘மின் மீட்டரில் பழுது ஏற்பட்டுள்ளது. கணக்கீடு செய்த ஊழியர் அட்டையில் எழுதிவிட்டு, எங்களுக்கு வந்து தகவல் கொடுத்தார். இதனால் கணினியில் பதிவேற்றம் செய்யவில்லை. மேலும் ராணியிடம் மின் ஊழியர் புகார் அளிக்கும் படி தெரிவித்துவிட்டு வந்துள்ளார். இளநிலை பொறியாளர் தலைமையில் வீட்டிற்கு சென்று மின் மீட்டரை பரிசோதித்தோம். அதில் பழுது ஏற்பட்டது தெரிய வந்தது. உடனடியாக புதிய மீட்டர் பொருத்தப்பட்டது. அவருக்கு கடந்த மாத மின் கட்டணத்தையே செலுத்தும்படி கூறியுள்ளோம்.’ என்றார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.